பால்யத்தில்
என்பைக்கூடு பல பரிணாமம் எடுக்கும்.
சிலேட்டு , நோட்டுகளை
பள்ளி நாட்களில் சுமக்கும்.
மாலை வேளையில்
கடைக்குப் பொருட்கள் வாங்கப் போகும்.
சனி , ஞாயிறுகளில்
காட்டிற்கு விதைப் பொருட்களை
எடுத்து வெற்றி நடைபோடும்.
என் பைக்கூடு
எனக்கு கிட்டியதில்
அம்மாவின் சாமர்த்தியமே அதிகம்.
நூறு ரூபாய்க்கு பொங்கத்துணி
புதுசு எடுத்திருக்கோம்.
துணிப்பை கொடுக்காம
சருவத்தாளக் கொடுக்கிறிங்க என
சண்டை போட்டு பையை வாங்கினாள்
ஜவுளிக்கடையில்.
நாட்களின் நகர்தலில்
எடை தாங்காது காதறுந்து போக ,
கவலைப்படாதே என ஆறுதல் கூறி
ஊசி நூலால் பையின்
உறவை ஒட்டி வைத்தாள்.
நிறம் இழந்த போது
நிம்மதியை நான் இழக்க ,
அடுத்த பொங்கல் வரை
அழுக்குப்படாமல் பாத்துக்கோ.
அம்மா புதுத்துணி எடுக்கும்போது
வேற பை வாங்கலாம் என
உற்சாகம் தந்தாள்.
வீட்டுச் சுவரில் அடிக்கப்பட்ட ஆணியில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
இன்றும் ஒரு சில துணிப்பைகள்
பால்யத்தைச் சுமந்து படி.
மு.மகேந்திர பாபு ,
2 Comments
அந்த நாட்கள் மனதில் அசைபோடுகிறது ஐயா. அருமை அருமை
ReplyDeleteபைக்கூடு வாசிப்பவரின் மனக்கூட்டில் நிச்சயமாக தொங்கும்......
ReplyDelete