சிறுவர் பாடல் - கல்வி கற்போம்!
கல்வி கற்கப் பறந்திடுவாய்!
கவலை நீயும் மறந்திடுவாய்!
கண்ணால் உலகைக் காணலாம்!
கல்வியால் உலகைப் பேணலாம்!
இருளை அழிக்கச் சூரியனும்
இனிதே காலையில் தோன்றியதே!
உயிர்க் கூட்டம் யாவையும்
உலகில் வேர் ஊன்றியதே!
அறியாமை இருள் நீங்கிடுமே!
அகத்தில் புத்தொளி தேங்கிடுமே!
அருகில் உள்ள மனிதரிடம்
அன்பால் ஒற்றுமை ஓங்கிடுமே!
கல்வி ஒன்று இருந்தாலே
செல்வம் எல்லாம் சேர்ந்துவிடும்!
கல்வி இல்லா வாழ்விலே
இன்பம் நாளும் சோர்ந்துவிடும்!
படிக்கும் பருவம் மகிழ்வென்று
மனதில் நீயும் நினைத்துவிடு!
துடிக்கும் இதயத் துடிப்பெல்லாம்
மக்கள் நலனில் இணைத்துவிடு!
மு.மகேந்திர பாபு, தமிழாசிரியர், இளமனூர், மதுரை.
0 Comments